2023 உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலை வளாகத்தில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து அதிபர்களையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் அல்லது நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் முன்னர் அறிவித்திருந்ததாக ரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகளின் கவனத்தை சிதறடிக்கும் உரத்த சத்தங்களை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகள் பாடசாலை வளாகங்களில் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அதிக போட்டி நிலவும் தேசியப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளை பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அதிபர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.