ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் தொடர்பில் வெளியாகும் பல்வேறு ஊடகச் செய்திகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸார், சந்தேக நபரோ அல்லது அவரது தந்தையோ சரணடைந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவரை ஆளுநரின் மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்யும் முயற்சியின் போது, தென் மாகாணத்தில் ஒரு இடத்தில் தனது வாகனம் மற்றும் கைத்தொலைபேசியை வைத்து பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், வாகனம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரோ அல்லது அவரது தந்தையோ சரணடைந்தமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரின் கோரிக்கையை ஏற்று சரணடைந்ததாக வெளியான தகவலையும் மறுத்துள்ளனர்.
சந்தேகநபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.