ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினுடைய ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவும் எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் இறுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், எதிர்காலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையில் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலருக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையினால் தற்போது கூட கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், எழுந்துள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.