வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது செயலிழந்துள்ள பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் இன்றுவரை நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகள் தொடர்பிலும் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். .
நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஆனந்த ஜயமான்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இதனைத் தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.யு.பி. கரலியத்த மற்றும் மாயாதுன்னே கொரியா ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி, நீதிமன்றில் முன்னர் உறுதிமொழி ஒன்றை வழங்கியிருந்தார்.
எனவே, இதுதொடர்பான மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு ஏற்கனவே உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை மேலும் தொடர வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். எனவே, உரிய மனுக்களை வாபஸ் பெறவும் அனுமதி கோரினர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடைபெற்ற குறித்த நிகழ்வுகள் தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிப்புரை விடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், மேற்படி அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் மனுவை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.