திங்கட்கிழமை (01) மற்றும் செவ்வாய்கிழமை (02) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை, வங்கித் திருத்தச் சட்டமூலம் அல்லது பாராட் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மற்றும் கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் விதிமுறைகள் விவாதிக்கப்படவுள்ளது.