கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற மருந்துகளினால் பல்வேறு சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகளை எதிர்கொண்ட சகல நோயாளிகள் தொடர்பிலும் முழுமையான அறிக்கையை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கைக்கு அமைய இது தொடர்பான உத்தரவை பிறப்பித்த மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, இது தொடர்பான அறிக்கையை மே மாதத்திற்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், எந்த பொது மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தரமில்லாத “Human Immunoglobulin” மற்றும் தரமற்ற “Ritoximap” மருந்துகளை வழங்கியது? அது எவ்வளவு? மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளின் தகவல்கள் மருந்தைப் பயன்படுத்திய நோயாளிகளுக்கு என்ன சிக்கல்கள் ஏற்பட்டன? இலங்கையில் இவ்வாறான சிக்கல்களைக் கொண்ட எத்தனை நோயாளிகள் உள்ளனர்? அந்த மருந்துகளை பயன்படுத்தி இறந்த நோயாளிகள் இருந்தால், அவர்கள் யார்? பிரேத பரிசோதனை அறிக்கைகள் உட்பட அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விரிவான அறிக்கைகளையும் வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
தரமற்ற ஊசி குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று மீள அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.