அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக அதன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பலமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் சிறந்த சீர்திருத்த முன்னேற்றத்திற்கும் இலங்கை அதிகாரிகளை ஒகாமுரா பாராட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் தொடக்கத்திலிருந்து இலங்கை அனுபவித்து வரும் கடின உழைப்பின் மூலம் பெற்ற ஆதாயங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் வலுவான உரிமையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் ஒகமுரா விளக்கியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அண்மைய சமூக-பொருளாதார அபிவிருத்திகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் ஒருமைப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பை அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை அமைச்சர் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் 2வது மீளாய்வை முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உலக வங்கியின் பல்வேறு உள்ளக மறுசீரமைப்புகள் குறித்தும், இந்த மாற்றங்கள் இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்தும் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக சபையின் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.