ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு முக்கிய உறுப்பினர்களை அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுவதில்லை என தெரிவித்த ரங்கே பண்டார, நாலக கொடஹேவாவின் கொள்கைகளை அமுல்படுத்துவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை அமுல்படுத்துவதா என்பதை தீர்மானிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் கோரியுள்ளார்.
அத்தோடு, பெயர் குறிப்பிடப்படாத ஏனைய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.