ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்ய இராணுவத்திற்கு கூலிப்படையாக அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
இதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதுடன் ரஷ்ய இராணுவ தளங்களை சுத்தம் செய்யும் சேவைக்காக இந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்த பணியாளர்கள் ரஷ்ய-உக்ரைன் போருக்கு கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆள் கடத்தலில் ஈடுபட்ட இந்த இரண்டு நபர்களும் அதிகளவான மக்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் இருந்து ரஷ்யா சென்றவர்கள் இந்நாட்டில் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்ட மேஜர் வாரியபொல பிரதேசத்தை வசிப்பவர் எனவும் முகவர் கண்டி திகன பகுதியை சேர்ந்தவர் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அனுப்பப்பட்ட பல இலங்கையர்கள் உக்ரைன் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் ரஷ்ய இராணுவ முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.