முதல் தொகுதியாக வழங்கப்படும் யூரியா உரத்தின் அளவை ஹெக்டேருக்கு 50 கிலோவாக அதிகரிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாயிகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமாரவுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்பெல்லாம் ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா உரம் மட்டுமே கொடுக்க பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நெற்செய்கைக்கு தேவையான முழுமையான யூரியாவை வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (06) மட்டக்களப்பில் உள்ள இலங்கை உரக் களஞ்சியசாலைக்கு 180 மெற்றிக் தொன் யூரியா உரமும், கொமர்ஷல் உர கம்பனியால் 125 மெற்றிக்தொன் உரமும் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இவ்வருடம் நெற்பயிர்ச் செய்கைக்கு உரம், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகளுக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.