அடுத்த வருடம் அரசாங்க செலவினங்கள் பாரியளவில் குறைக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதன்படி, திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்ற அத்தியாவசியமற்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலை நடத்த வேண்டும் என சில கட்சிகள் அறிவித்துள்ள போதிலும் தற்போது தேர்தலை நடத்துவதற்கு அதிகளவு பணம் செலவாகும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இன்றுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரச பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் மேலும், மின்சார சபையில் மட்டும் 1,100 ஊழியர்கள் 2023ல் ஓய்வு பெற உள்ளதோடு, 1,200 பொலிஸ் அதிகாரிகளும் இன்றுடன் ஓய்வு பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இவர்கள் ஓய்வு பெறுவதால் அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.