அரசாங்க வருவாயை மேம்படுத்தவும், வசூலிக்கவும் நவீன கணினி அமைப்பை அமைக்கும் நடவடிக்கைகளுக்காக 4 முக்கிய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க கணக்குகள் மற்றும் நடைமுறைகள் பற்றி கோபா குழு ஆகியவை இணைந்து நடத்திய கலந்துரையாடலின் போது புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதி, நிதி அமைச்சின் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர்கள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பர் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரு வாரத்திற்குள் பூர்வாங்க விவாதத்தை நடத்தி, மே 15 ஆம் திகதி அன்று COPA குழுவின் முன் பூர்வாங்கத் திட்டங்களை முன்வைத்து, இது தொடர்பான அறிக்கையை அளிக்க தொழில்நுட்பக் குழு நியமிக்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்திட்டம் செயல்படுத்தப்படும் வரை, ஒவ்வொரு மாதமும், இது குறித்து முன்னேற்ற ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதோடு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, அரசாங்கக் கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்ககே, மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் தலைவரான போதே இந்தக் குழுக்கள் கூடியுள்ளன.
மேலும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், நிதியமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, உள்நாட்டு இறைவரி திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2016 ஆம் ஆண்டில், அரசாங்கக் கணக்குகளுக்கான குழு, அரசாங்கத்தின் வருவாயைச் சேகரித்து மேம்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, தகவல் தொழில்நுட்ப அமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு பரிந்துரையை வழங்கியதோடு அதனை நடைமுறைப்படுத்தாதது குறித்து கோபா கமிட்டி தலைவர், அரசின் வருவாய் வசூல் நிறுவனங்களுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தினுள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முறையான கணினி அமைப்பை தயாரிப்பது அவசியம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இங்கு கருத்து தெரிவித்த முறைகள் மற்றும் நடைமுறைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தேவையான தொழில்நுட்ப பின்னணி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தளவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது போன்றவற்றை ஆய்வு செய்து உறுதியான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.