நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்காக மேலும் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் முன்னர் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும், நேற்றைய தினம் முழுத் தொகையும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 03 பில்லியன் ரூபாவை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை பருவத்தில் நெல் கொள்வனவுகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியை 02 மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போது மாவட்ட மட்டத்தில் அரிசி விநியோகம் இடம்பெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் இன்னும் சில மாதங்களுக்கு இதே முறையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.