இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இணங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருப்பதே இதற்கு உடனடி காரணம் என்றும், அரசு நிர்ணயித்த மக்கள் நலன் சார்ந்த இலக்குகளை நோக்கி நிறுவனத்தை எடுத்துச் செல்வதில் பங்களிக்காததுதான் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.