நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதில் விவசாயிகளை சுரண்டும் முறை காணப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டில் எடை போடுவதற்கு பயன்படுத்தப்படும் பெரும்பாலான தராசுகள் சரியான தரத்தில் இல்லாததே இதற்கான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு.விவசாய சேவை நிலையத்தினால் வழங்கப்பட்ட யூரியா உர மூட்டையில் சரியான எடை உரம் இல்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். அதன்படி பொலிசார் தலையிட்டு, மின்சார தரை தராசில் வைத்து உரத்தை அளந்தபோது, உரிய எடையுடன் தேவையான அளவு உரம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் பயிரிடும் பயிர்களை எடைபோடுவதற்கு பல வியாபாரிகள் தொங்கும் தராசுகளை பயன்படுத்துவதாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, பெரும்பாலான தராசுகள் சரியான தரத்தில் இல்லாததால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தில் பெரும் தொகையை வியாபாரிகள் திருடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி நுகர்வோருக்கும் அநீதி ஏற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக போலி தராசு பாவனையை தடுக்கும் வகையில் எடை அளவீடு திணைக்களத்துடன் இணைந்து செயற்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் விவசாய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டும் போலி தராசு கடத்தலை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுவாக, அனைத்து தராசுகளும் மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள எடை மற்றும் அளவீடு பிரிவில் வருடத்திற்கு ஒரு முறை பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், நாட்டில் பயன்படுத்தப்படும் பல தராசுகள் பதிவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.