சபாநாயகர் மற்றும் சபாநாயகரின் ஊடகச் செயலாளருக்கு எதிராக எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வி எழுப்ப எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறப்புரிமைக் கேள்வி எழுப்ப சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிவிக்கும் போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாகப் படிக்காமல் நாடாளுமன்ற அதிகாரியொருவரின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலேயே சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவித்துள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கி சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல என சபாநாயகர் கூறியுள்ளமை உடனடியாக திருத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளதுடன் குறித்த அறிக்கையின் பின்னர், கடந்த 11ஆம் திகதி சபாநாயகரின் ஊடகச் செயலாளர் அறிக்கையொன்றை வெளியிட்ட கூற்றானது முற்றிலும் பொய்யானதும், நாட்டையும் நீதித்துறையையும் தவறாக வழிநடத்துவதாகவும் அமைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சகல ஆதாரங்களையும் உரிய முறையில் ஆராய்ந்த பின்னரே இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயற்சித்து, நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.