ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தயாரிப்பதற்கும், புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநர் தலைமையிலான செயலணியை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, மே 1ஆம் திகதி முதல் நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் விதிகளுக்கு அமைய விதிமுறைகளை விதிக்க அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்துள்ளதுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைச் சேர்த்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.