நாளை ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் சாதாரண தராதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராகிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸாருக்கு மேலதிகமாக ஆயுதப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் போது நுளம்புக் கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துமாறும் பரீட்ச்சாத்திகளை கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பரீட்சை தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு பரீட்சை மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பரீட்ச்சாத்திகள் சரியான நேரத்தில் பரீட்சை மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
எனவே, நாளை தொடங்கும் பொதுபி பரீட்சையானது ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறுவதோடு இந்த ஆண்டு பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 94,450 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 78,103 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, இவர்களுக்காக செயல்படும் பரீட்சை மையங்களின் எண்ணிக்கை 3,568 எனவும் ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட 35,000க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பரீட்சை கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
மேலும், இவ்வருடம் பொதுப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் வடரெக்க சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகள் அந்த சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகள் நவா மகசீன் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் இவர்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியும் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.