மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ, கட்டார் ஏர்லைன்ஸுடன் இணைக்கப்பட்ட விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்குத் திரும்பியதாகவும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோல்டன் பாதை வழியாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், மதபோதகர் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டதோடு வந்த 48 மணி நேரத்திற்குள் சிஐடியின் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி மதபோதகர் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு தொடர்பில் குறித்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தர் மற்றும் பிற மதங்கள் தொடர்பான இழிவான அறிக்கைகள் அடங்கிய குற்றச்சாட்டுகள் காரணமாக, நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட ஒரு பிரசங்கத்தின் வீடியோவைத் தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், மே 16 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மதபோதகர் பெர்னாண்டோ சிங்கப்பூருக்கு புறப்பட்டதோடு இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் கூறினர்.
இதன்படி, மே 26 அன்று, மதபோதகர் பெர்னாண்டோ, தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி, தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்ததோடு எஃப்ஆர் மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் கண்காணிப்பாளர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான டிஐஜி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான இயக்குநர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் கிரைம் பிரிவின் பொறுப்பாளர் (ஓஐசி) ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தனது கருத்துக்கள் நீதிமன்றத்திற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் பொலிஸார் முன்வைக்கவில்லை என கூறி, தன்னை கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் சட்டவிரோதமானது என மதபோதகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.