வீதி மற்றும் வீட்டு விபத்துக்கள் இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் மக்களில் சுமார் ஒரு மில்லியன் பேர் வீதி மற்றும் வீட்டு விபத்துக்களால் காயமடைந்துள்ளதாக இன்று (30) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நாளொன்றுக்கு வாகன விபத்துக்களினால் சுமார் 30 பேரும் வீதி மற்றும் உள்நாட்டு விபத்துக்களினால் வருடாந்தம் 12,000 பேரும் உயிரிழப்பதாகவும் தொற்று அல்லாத நோய்கள் எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் மற்றொரு பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, 35 வயதிற்கு மேற்பட்டவர்களில் 30 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தினாலும், 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்நாட்டில் 10 வீதமான சிறுவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களிடையே நீரிழிவு நோயும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.