மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இன்று (16) விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாவனைகளில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட 08 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு பஸ்டன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர பஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதுடன் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரது கைத்தொலைபேசிக்கு அதிகளவான கொள்வனவுதாரர்களிடமிருந்து அழைப்புகள் வந்ததாக வெல்லவீடிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் பொலிஸார் உரிய நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் வியாபாரியுடன் சென்று பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நாளொன்றுக்கு 1,200 ரூபாய் முதல் 2,400 ரூபாய் வரை பணத்திற்கு இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.