ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் பலரது கோரிக்கைக்கு அமைய இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் அனைத்து பிராந்திய கல்விப் பணிப்பாளர்களும் அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ள நிலையில் பெற்றோர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விண்ணப்பத்தை பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்கின்றது.
மேலும், கல்வி அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பாடசாலைக்கு எவ்வளவு புலமைப்பரிசில் வழங்க முடியும் என்பது பிராந்திய கல்விப் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, அனைத்துப் பாடசாலைகளிலும் அதிபர்கள் தேர்வுக் குழுவை நியமித்து, 01.04.2024க்குப் பிறகு, தங்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கும் புலமைப்பரிசில்களின் அளவுக்கேற்ப புலமைப்பரிசில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாடசாலைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான புலமைப்பரிசில் வெற்றியாளர்களின் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களைக் கல்வி அமைச்சு ஜனாதிபதியின் நிதிக்கு அனுப்பிய பின்னர், ஏப்ரல் 2024 முதல் அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.