ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான மூளையாக செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும் என்றும், தனக்கு உத்தரவு பிறப்பித்தால், குறித்த தகவலை நீதித்துறைக்கு வெளியிடத் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, அது தொடர்பான தகவல்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில், தகவல்களை கண்டிப்பாக இரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்துமாறு கோரி சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
250 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்ற கொடூரமான குண்டுவெடிப்பு பற்றிய முக்கியமான தகவல்க என்பதினால் இந்த கருத்து அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.