2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளையில் உள்ள இரண்டு சொகுசு வீடுகள், அல்-கொய்தா மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) ஆகியவற்றின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக நேற்று செவ்வாய்க்கிழமை (26) சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வீடுகளின் உரிமையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொஹமட் ஹயத்துல்லா மற்றும் மொஹமட் ஹாசிம் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அரச தரப்பு வழக்கறிஞர் ஷமிந்த விக்கிரம் தாக்கல் செய்த வாதங்களை கவனத்தில் கொண்ட நீதிபதி பெஞ்ச், சம்பந்தப்பட்ட வீடுகளை பறிமுதல் செய்யும் முடிவை எதிர்த்து முன்வைக்கப்பட்ட இரண்டு மனுக்களையும் இரத்து செய்து உத்தரவிட்டது.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, பொலிஸ் விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி, இரண்டு வீடுகளின் உரிமையாளர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபரான லுக்மான் தாலிப் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், குறித்த வீடுகள் அல்-கொய்தா மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக. வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அரச மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரண்டு வீடுகளையும் கைப்பற்றுவதற்கான ஜனாதிபதியின் உத்தரவு போதிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாகக் குறிப்பிட்ட அரச தரப்பு, இந்த நடவடிக்கையால் வீட்டு உரிமையாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்று வாதிட்டார். எனவே, இந்த இரண்டு மனுக்களையும் இரத்து செய்யுமாறு நீதிபதி பெஞ்சில் அவர் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், மனுதாரர் தரப்பு அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக நிராகரித்த அதே நேரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்வது சட்டவிரோதமானது என்றும் வலியுறுத்தியது.
இதன்படி, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா, புலனாய்வாளர்கள் அவ்வாறான தகவல்களை வெளிக்கொணரவில்லை எனக் கூறி, அரசாங்கத் தரப்பு சமர்ப்பிப்புகளை சவால் செய்தார்.
நீண்ட விசாரணைக்கு பின், மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் அமர்வு, மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இரத்து செய்து உத்தரவிட்டது.