16 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க புர பிரதேசத்தில் தாயையும் மகனையும் சுட்டுக் கொன்ற இரட்டைக் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சம்பத் சமிந்த என்ற குற்றவாளிக்கு கொழும்பு உயர் நீதிமன்றனால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி விக்கும் களுஆராச்சி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி, கொழும்பு பண்டாரநாயக்க புரத்தில் உள்ள வீட்டில் வைத்து மாயாதுன்னகே சந்திரலதா மற்றும் அவரது மகன் தினேஷ் பிரசன்ன ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் இந்த பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பின், உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, மரண தண்டனை விதித்த நிலையில், தன்னை விடுவிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதிவாதி மனு தாக்கல் செய்தார்.
இதன்படி, குறித்த மேன்முறையீட்டின் மூலம் பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமக்கு உயர் நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை கிடைக்கவில்லை எனவும், உயர்நீதிமன்ற நீதிபதி தனக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும், தான் முன்வைத்த பிரதிவாதியையும் உயர்நீதிமன்ற நீதிபதி தனது முடிவை அறிவிப்பதற்கு முன் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, மேல்முறையீட்டு மனு மீதான முழு விசாரணையை நடத்திய மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கியதில் உயர்நீதிமன்ற நீதிபதி சரியானதைச் செய்துள்ளார் என்று கூறியதுடன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் வழங்கிய வாக்குமூலத்தின் ஊடாகவும் நியாயமான சந்தேகத்தை எழுப்புவதற்கு பிரதிவாதி தவறியுள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரச தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் மேன்முறையீட்டு பெஞ்ச் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், இங்கு மேன்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்னாண்டோவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேஷிகா சில்வாவும் ஆஜராகியிருந்தனர்.