2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2020 மற்றும் 2021 இல் கோவிட் ஊரடங்கு காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனத்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்படி, பின்வரும் மூன்று (03) காரணங்களுக்காக 2022 இல் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனரக எரிபொருள் எண்ணெய் மற்றும் நாப்தா கிடைக்காததன் காரணமாக டீசலின் தேவை அதிகரித்தது.
- மின்வெட்டு காலத்தில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் தேவை அதிகமாக இருந்தது.
- எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளின் போது எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை இயல்பாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் பாவனை குறைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
அப்போது, குறித்த சங்கத்தின் தலைவர், நாட்டின் பொருளாதார நிலையும் எரிபொருள் நுகர்வு குறைவதற்கு ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.