ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஹக்மன, அலையபத்துவ, சேருநுவர மற்றும் கலேவெல பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறுகள் காரணமாகவே குறித்த குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 10 பேர் உயிரிழந்துள்ள எட்டு வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த விபத்துகளில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, இந்த பண்டிகைக் காலத்தில் மது அருந்துதல் அதிகமாகக் காணப்படும் கூட்டங்களில் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களைத் தணிக்கும் வகையில், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.