ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அம்பேவெல பால் பண்ணைக்கு விஜயம் செய்து அதன் அபிவிருத்தி செயற்பாடுகளை அறிந்து கொண்டார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 டிசம்பரில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர பரிசோதனை விஜயம் ஒன்றிற்காக விஜயம் செய்ததாகவும், அங்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய கடந்த வருடம் பண்ணையில் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அம்பேவெல பால் பண்ணைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பால் பண்ணை குழும ஊழியர்கள் வரவேற்றனர்.
பண்ணையின் புதிய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்த ஜனாதிபதி, கறவை மாடுகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பேவெல பண்ணை பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள படிப்படியான வளர்ச்சி மற்றும் அது தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி மதிப்பீடு செய்தார்.
மேலும், பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், வார இறுதி நாட்களில் பண்ணையை பார்வையிட வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.