நிதர்ஷன் வினோத்
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.
மேலும், இவ்வழக்கு விசாரணையானது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.