நாடாளுமன்றக் கூட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் நாட்களில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் அவசர மருத்துவத் தேவைகள் அல்லது அரசாங்கத்தின் மிக அவசரமான வேலைகள் தவிர வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என பொருத்தமான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023ஆம் நிதியாண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கான உத்தேச வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு இம்மாதம் 14ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், குழுவின் விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.