வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் தடைகளை ஏற்படுத்தும் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையில் அந்த திருமணங்களை பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திருமணமானவர்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பிரஜையின் உடல்நிலையை உறுதிப்படுத்தும் சுய அறிவிப்பும் பெறப்பட வேண்டும். இவ்வாறான திருமணங்களை மேலதிக பதிவாளர்களால் மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பிரஜைக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணத்தைப் பதிவு செய்வதற்கு வெளிநாட்டுத் தரப்பினரால் பெறப்படும் ஆவணங்களே போதுமானதாக இருக்கும் வகையில் புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, கடவுச்சீட்டு, சிவில் அந்தஸ்து மற்றும் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே போதுமானது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.