நீண்டகால முறையான மாற்றங்களை (தொலைநோக்கு முறையான மாற்றங்கள்) கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியினால் இன்று (03) விடுக்கப்பட்ட இந்த எழுத்துமூல அறிவிப்பில், இது தொடர்பான பிரேரணைகளில் தேசிய சபை உருவாக்கம் மாத்திரமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நீண்ட கால முறையான மாற்றங்களை உருவாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் குழு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு ஆகியவை அடங்கும் என ஜனாதிபதி சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். பொது நிதி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான குழுக்களை நியமிக்க முன்மொழியப்பட்டாலும் அது இன்னும் நடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துறைசார் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல் போன்ற யோசனைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும்.
மேலும் 17 பாராளுமன்ற துறைசார் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டிய போதிலும், இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும், இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் மற்றும் அவர்களின் தகுதிகள் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடம் வரவு செலவுத் திட்டம் அமுல்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியும் எனவும் இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் முறையான மாற்றம் மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்கான சட்ட முன்வரைவுக்கு அமைச்சர்கள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் குறித்த கடிதத்தில் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.