பாரிய தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய செடிகளை நடுவதை பாரிய பெருந்தோட்ட நிறுவனங்கள் முற்றாக நிறுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மாறாக, தற்போதுள்ள தோட்டத்தை பராமரிப்பார்கள் அல்லது அந்த நிலங்களில் இருக்கும் மரங்களை வெட்டி விற்பனை செய்கின்றார்கள் எனவும் அவர் மேலும்,தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் பொது நோக்கத்திற்காக சிறிய அளவிலான காணியை கூட அவர்கள் வழங்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆகவே, பயன்படுத்தப்படாத இந்தக் காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் தேவையான சட்டங்களை உருவாக்குவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.