சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, காலி இலக்கிய விழா பல வருடங்களாக நடைபெறவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய இடங்களில் பல்வேறு கலைக் கூறுகள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த தொடர் நிகழ்ச்சிகளை வரும் ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதோடு புதிய கலை ஊடகங்கள், இசை, பேஷன் ஷோ, புத்தகக் கண்காட்சிகள், உள்ளிட்ட பல்வேறு கலைக் கூறுகளுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இக்கலந்துரையாடலின் போது, இலங்கையின் அடையாளத்தையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் சகல செயற்பாடுகளையும் ஒழுங்கமைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதோடு இத்திட்டத்தின் அடிப்படையில், சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்ட பல்வேறு கலைக் கூறுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் வெளியிடப்படவுள்ளன.
மேலும், சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் எனவும் அதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.