நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதியினுடைய சிந்தனையில் உருவாகிய சௌபாக்கிய வேலைத்திட்டத்தினால் வாழ்வாதார உதவிகள் இறக்காமம் பிரதேச செயலகத்தில் (11) இன்று வழங்கிவைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் “சௌபாக்கிய வாழ்வாதார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம்” எனும் கருப்பொருளின் கீழ் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் ஊடாக சுயதொழில்களை வலுவூட்டி அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின், விதாதா வள நிலையத்தின் “ஒரு கிராமத்தில் ஒரு சுயதொழில் முயற்சியாளரை ஊக்குவித்தல்” நிகழ்ச்சி திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தித்திறனை மேலும் மேம்டுத்தும் நோக்கில் அனைத்து கிராம சேவக பிரிவுகள் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல் உட்பட கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், விதாதாள வள நிலையத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜி.கே.முஹம்மட், விதாதா நிலைய கள உத்தியோகத்தர் ஏ. ஜனூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.