தேசிய தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தனது இலட்சினையில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழியை அகற்றியுள்ளது.
முன்னதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தனது இலட்சினையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் ரூபவாஹினி என எழுதப்பட்டு இருந்தது.
எனினும் தற்போது தமிழ், ஆங்கிலம் நீக்கப்பட்டு சிங்களத்தில் மட்டும் ரூபவாஹினி என எழுதப்பட்டுள்ளமை அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கையின் அரச கரும மொழிகளில் சேவை வழங்கி வருகின்ற நிலையில், சிங்களத்திற்கு மட்டும் விசேட இடம் கொடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சரான டளஸ் அழகப்பெருமவிடம் வினவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர்,
இலங்கையில் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சிங்களம் மட்டும் உபயோகிக்கப்படுவதால் சிங்களத்தை மட்டும் வைத்திருக்கின்றோம். தமிழ் மொழிக்கு தனி சேவைகள் வழங்கப்படுகின்றதால், ஆங்கிலம் மற்றும் தமிழை அகற்றியுள்ளோம்.
தமிழுக்கான சேவையாக “நேத்ரா” உள்ளது. இதில் உள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை நீக்கியுள்ளோம். இதேபோல் தான் ரூபவாஹினியில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கிலத்தை அகற்றியுள்ளோம்.
உதாரணத்திற்கு தனியார் தொலைக்காட்சி சேவைகளை எடுத்துக்கொண்டால், ஆங்கில ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் உள்ளது. தமிழ் சேவைகளுக்கு தமிழில் மட்டுமே பெயர் கொடுக்கப்படுகின்றது. சிங்கள ஊடகங்களில் சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
அதைப்போன்றுதான் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் சிங்களம் என்பதால் சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.
இதில் எந்தவொரு பிரிவினைவாதமோ, மதவாதமோ, இனவாதமோ இல்லை என்று உறுதியாக தெரிவித்தார்.