
இன்று (24) முதல் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளினை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையினை வழங்கக்கூடிய வகையில் நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும்,இந்த புதிய சட்டத்தின் கீழ், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலமானது நேற்று (23) முதல் 2022ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
குறித்த சட்டமூலத்தில் நேற்று மாலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டார் .
மேலும், இச்சட்ட மூலமானது போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் தற்போதைய காலத்தினுடைய தேவைக்கு ஏற்றவாறு குறித்த சட்டத்தினை வலுப்படுத்தி திருத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இம்மாத முதல் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்புக்களில், சுமார் 103 கிலோகிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 7,536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.