
60 வயதை கடந்த அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு 60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் பொதுப்பணித்துறை வீழ்ச்சியடையும் என பெரும்பாலான அரச தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் தெரிவித்தன.
இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிவிப்பில், வருடாந்தம் சராசரியாக 18,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர் ஆனால் இம்முறை மாத்திரம் சுமார் 25,000 அரச ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளதோடு, எவ்வாறாயினும், அரச சேவையின் இயக்கத்தில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு வருடமும், அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடித்தவர்களும் அரச சேவையில் இணைகின்றனர். குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்கு குறைந்த தரத்திலான தகுதி வாய்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பபானது நேற்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.
இவ் அறிவிப்பானது, எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு அதிகாரமும் அவர்களை சேவையில் வைத்திருக்க முடிவு செய்யாவிட்டால், அரசியலமைப்பு அல்லது வேறு ஏதேனும் சட்டத்தால் கட்டாய ஓய்வுபெறும் வயது நிர்ணயிக்கப்பட்டவர்களைத் தவிர, பிற பொது அதிகாரிகள் அவர்கள் 60 வயதை அடையும் போது சேவையிலிருந்து ஓய்வு பெற முடியும் எனவும் அவ்வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.