சீதுவ மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, சீதுவ ராஜபக்ஷ புர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 29 வயதுடைய நபரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.