அநுராதபுரத்திலிருந்து காங்கசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அநுராதபுரம் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகளின் முன்னேற்றத்தை அவதானிக்கும் சந்திப்பின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்: அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான பழைய புகையிரதப் பாதையின் நவீனமயமாக்கல் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு சாலை முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, புதிய ஸ்லீப்பர்கள் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, மணிக்கு 100 மைல் வேகத்தில் ரயில்களை இயக்கக்கூடிய அதிநவீன ரயில்பாதையாக இந்த சாலை மாற்றப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மஹவ முதல் ஓமந்தை வரையிலான இத்திட்டத்திற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் 3500 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய வளர்ச்சி திட்டம் எனவும் ஏற்கனவே தண்டவாளங்கள் அமைத்து முடிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் காங்கேசன்துறைக்கான ரயில் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.