
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்பு பகுதியில் இளைஞர்களிடம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள 5 இளைஞர்களிடம் குறித்த பெண் 25 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த பெண் ருமேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மாதாந்தம் இரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞரிடம் மோசடி செய்துள்ளதாகவும் நான்கு மாதங்களாக பணம் பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணால் ஏமாற்றப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ததாகவும் மோசடியில் சிக்கிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் குழுவின் கடவுச்சீட்டு மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு ஆவணங்களை மறைத்துவிட்டு, அவற்றை மீள தங்களிடம் வழங்குவதை தவிர்த்து வருவதாக குறித்த இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, விசாரணையில், பெண் தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உரிமம் இல்லாமல் இந்த பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.