சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட வேளையில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள் இன்று விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ASY-013 விமானத்தில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் இன்று காலை 09.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்தோடு, இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் பல நாள் மீன்பிடி படகுகள் மூலம் கடல் கடந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுடன், பெருமளவிலான இலங்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததோடு, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்படி,கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் குழுவை கையளித்துள்ளனர்.