(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அம்பாறை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஸிம் (நூரி) தலைமையில் சாய்ந்தமருது தனியார் விடுதியில் ( 8) நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப்தார் விசேட சொற்பொழிவு மற்றும் பல்லின சமூகத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து அஷ்ஷெய்க் கலாநிதி எம். எல்.முபாறக் (மதனி) சிறப்புரை ஆற்றினார். இந்து மத குரு ஸ்ரீவஸ்ரீ ந.பத்மநிலோஜன் குருக்கள், கிறிஸ்துவ மதத் தலைவர் சார்பாக அருட் திரு. ரவி முருகுப்பிள்ளை ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் பல்லின சமயத் தலைவர்கள், உலமாக்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் நன்றியுரையை மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம். அஹமது அன்சார் மௌலானா நிகழ்த்தினார்.