முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிந்தித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் நெருக்கடியின் போது நாட்டில் கோழிப்பண்ணை தொழில் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வர்த்தக அமைச்சின் தலையீட்டால் குறித்த தேவையை பூர்த்தி செய்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, கோழி வளர்ப்பு தொழில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விவசாய அமைச்சு தலையிட்டு கால்நடை தீவன இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வழங்குதல் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தற்போது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் மேலும் தெரிவித்தார்.