கடந்த 12ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கியை வழங்கிய இராணுவ அதிகாரி சார்ஜன்ட் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இரண்டாவது கொமாண்டோ படைப்பிரிவின் கிளிநொச்சி முகாமுக்கு சொந்தமான துப்பாக்கி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குழுவும் எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் சந்தேக நபரை கிளிநொச்சி இரண்டாவது கொமாண்டோ படைப்பிரிவு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர். மல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய கொமாண்டோ படைப்பிரிவு ஊழியர் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய சந்தேக நபர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடமொன்றை சோதனையிட அழைத்துச் சென்ற போது, சந்தேகநபர் அங்கிருந்த துப்பாக்கியால் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.