மனித கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ஓமன் சென்றுள்ளது.
இதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரைக்கு அமைய இந்த குழுவினர் நேற்று (10) நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்..
அங்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி, சமீப நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஓமனில் ஆள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், மூன்று புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒரு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் விசாரணைகளுக்காக சென்றவர்களில் உள்ளடங்குகின்றனர்.