தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை 2023 ஆம் ஆண்டு நெல் அறுவடை வரை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, கால்நடை தீவனமாக அரிசியை பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2021 உயர் பருவத்தில் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம், இலங்கையில் சோளத்தின் விளைச்சல் 90,000 மெட்ரிக் தொன்களாகக் குறைந்துள்ளதாகவும் இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் கால்நடை தீவனத்திற்கான சோளமானது பெரும் தட்டுப்பாடாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் அளவு 02 இலட்சம் மெற்றிக் தொன் எனவும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு இடையில் 27,867 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு 67,000 மெற்றிக் தொன் சோளத்தின் அறுவடை எதிர்பார்க்கப்படுவதோடு இந்த வருடத்திற்கான மொத்த சோளத்தின் தேவை 05 இலட்சம் மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போதைய மக்காச்சோள அளவின்படி கால்நடை தீவன பதப்படுத்தலுக்கு மேலும் 17,633 மெட்ரிக் டொன் சோளம் தேவைப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சோளத் தேவைக்கு மாற்றாக அரிசியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்ற போதிலும், கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் நெல்களை யாழ் பருவ அறுவடை வரை பயன்படுத்த வேண்டாம் என விவசாய அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் அரிசி உபரியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் மிகுதியான அரிசியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.