ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான 108 வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த வழக்குகளில் இருந்து நீக்கப்படுவாரா? இல்லையா? குறித்த உத்தரவந்து எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தாக்குதலுக்கு தாம் ஆளானமைக்காக இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, இந்த வழக்குகள் அனைத்தும் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளை அங்கு கருத்துரைத்த ஜனாதிபதியின் சட்டத்தரணிகள், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அந்தக் கோரிக்கை தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை பங்குதாரர்கள் இன்று முன்வைத்ததோடு அதன்பிறகு, இது தொடர்பான உத்தரவு மார்ச் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன சார்பில் தாம் சார்பில் ஆஜராகப் போவதில்லை எனவும் சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.