எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டோ, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் படி, கட்டணங்களை திருத்துவதற்கு எரிபொருளின் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்..
மேலும், இதுதொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றிரவு ஏற்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெற்றோல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில் வாடகை முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என நிபுணத்துவ முச்சக்கரவண்டி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 லீற்றர் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.