கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.க்கள் நீக்கப்பட வேண்டும் என சட்ட வாதம் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான எம்.பி.க்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.க்கள் யார் என்பதை கண்டறிந்து தனித்தனியாக விசாரணை நடத்துவதன் மூலமே நீக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட சுமார் பத்துப்பேர் எம்.பி.க்களாகப் பணியாற்றி வருவதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி பதவிகளை வகிக்க முடியாது என்ற ஷரத்து ஒன்று உள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் வகையில் குறித்த திருத்தத்தில் விசேட ஷரத்து உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை தமது கட்சியிலிருந்து நீக்குமாறு சமகி ஜனபலவேக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக சமகி ஜனபலவேக செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றிதழை சபாநாயகர் பதிவு செய்தவுடன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சான்றிதழை அடுத்த வாரம் பதிவு செய்ய முடியும் என நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இருப்பின் அவர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எம்.பி.க்கள் நியமனத்தினை தாம் செய்யவில்லை, தேர்தல் ஆணையத்தால் செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இரட்டைப் பிரஜைகள் யார் என்பதை அடையாளம் காணும் முறைமை தன்னிடம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்கள் குறித்த தகவல்களை உரிய நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தாலேயே அவர்களை நீக்க முடியும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.